பள்ளி மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை

பள்ளி மாணவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட வழக்கில் இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பள்ளி மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை
Published on

வள்ளியூர்:

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜோனதன் ராபின்சன்(வயது75). பாதிரியார். இவர், கடந்த 1995-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள சின்னம்மாள்புரத்துக்கு வந்தார். அங்கு ‘கிரேயல் டிரஸ்ட்’ என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய அனாதை மாணவ, மாணவிகளுக்கான விடுதி ஒன்றை உருவாக்கினார்.

சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 22 சிறுவர், சிறுமிகள் அந்த விடுதியில் தங்கினர். இவர்கள், அந்த விடுதியில் இருந்து அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தனர். இந்தநிலையில், கடந்த 2011-ம் ஆண்டில் பாதிரியார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த காப்பகத்தில் தங்கி இருந்த 16 வயது பள்ளி மாணவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், வள்ளியூர் போலீசாரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி அந்த காப்பகத்தை மூட நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கிடையே, பாதிரியார் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி ஜோனதன் ராபின்சன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ‘குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

பின்னர், ஜோனதன் ராபின்சன், 2 நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com