பூமியின் வரலாறில் இந்த ஆண்டுதான் மிக அதிகமான வெப்பம் தாக்கியது - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

உலகம் இயந்திரமயமான பிறகு 2019-ம் ஆண்டில்தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது.
கோப்பு படங்கள்
கோப்பு படங்கள்
Published on

மாட்ரிட்:

உலக வானிலை மையம் நடத்திய புவி வெப்பமயமாதல் தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் பின்வருமாறு:-

உலகம் இயந்திரமயமாக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் 2019-ம் ஆண்டில்தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது. கடல் நீரில் இருந்த அமிலங்களின் நச்சு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக்காட்டிலும் தற்போது 25 சதவீகிதம் அதிகமாகி விட்டது. 

மேலும், பல பகுதிகளில் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் நீரின் மட்டம் உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் உயர்ந்துள்ளது.

2019-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் ஒரு கோடி (10 மில்லியன்) மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அவற்றில் 70 லட்சம் பேர் (7 மில்லியன்) மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆண்டின் இறுதிக்குள் இயற்கை பேரிடர்களால் வசிப்பிடங்களை விட்டு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சமாக (22 மில்லியன்) உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நூறாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அனல் காற்று போன்ற பேராபத்துக்கள் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன. 

ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பியாவிலும் இந்த ஆண்டு மிகவும் அதிகமாக அனல் காற்று வீசியுள்ளது என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதால் 2010 முதல் 2019 வரையிலான ஆண்டுகள் புவியின் மிக அதிக வெப்பமயமான ஆண்டாகும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com