அரியலூரில், கலெக்டர் வீட்டை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் 20 பேர் கைது

அரியலூரில் மாவட்ட கலெக்டர் ரத்னா வீட்டை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
முற்றுகையிட்ட தி.மு.க.வினர்
முற்றுகையிட்ட தி.மு.க.வினர்
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற்று, நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திருமானூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை அறிவிக்காமல் தாமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், தி.மு.க.வினர் சிலர் ஒன்று திரண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் ரத்னா வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டருக்கு எதிராக பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட செயலாளர் சிவசங்கர் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்று அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் நேற்று காலை விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com