போலீசாரை தாக்கியதாக விவசாயி மீது பொய் வழக்கு - 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

களக்காடு அருகே போலீசாரை தாக்கியதாக விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
மாநில மனித உரிமைகள் ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையம்
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்தவர் பால்சன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். பால்சன் தனது சகோதரி ரெஜினாவுடன் கடந்த 19-06-2016 அன்று திறுக்குறுங்குடி பஜாருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் திறுக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் சமுத்திரம், மனோஜ்குமார் மற்றும் ஏட்டு லிங்கராஜன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் பால்சனை மறித்து அவரிடம் மோட்டார் சைக்கிளுக்குரிய ஆவணங்களை கேட்டனர்.

அதில் பால்சனிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாதது தெரியவந்தது. உடனே பால்சன் தனது வீட்டில் லைசென்ஸ் இருப்பதாகவும், போய் அதனை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதை கேட்க மறுத்த போலீசார் அவரை அவதூறாக பேசியுள்ளனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதை தடுக்க முயன்ற அவரது சகோதரி ரெஜினாவையும் போலீசார் தாக்கினர். பின்பு பால்சனை திறுக்குறுங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் மீது போலீசாரை தாக்கியதாக பொய்வழக்கு போட்டுள்ளனர்.

இதையடுத்து பால்சன் சென்னை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தன் மீது போடப்பட்ட பொய் வழக்கு குறித்து புகார் அளித்தார்.

அந்த புகாரை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். விசாரணையில் பால்சன் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது என்பது உறுதியானது. இதையடுத்து பொய் வழக்கு பதிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சமுத்திரம், மனோஜ்குமார் மற்றும் ஏட்டு லிங்கராஜன் ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தார்.

அதனை பால்சனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரம் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com