

திருப்பதி:
கடப்பா மாவட்டம் சி.கே.தின்னே மண்டலத்தில் இருந்து வாகனத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் கடப்பா- ராயச்சோட்டி சாலையில் சுகாலிபிடி கிராமம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு காரில் செம்மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். அதிலிருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். 17 பேர் பிடிபட்டனர்.
பிடிபட்ட 17 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தீர்த்தகிரி (வயது 23), ராமசுவாமி ரவி (20), அண்ணாமலை (37), ராஜேந்திரன் (30), மாணிக்கம் (39), அங்கராஜன் (37), சுப்பிரமணியம் (23), வரதராஜன் (27), ஆண்டி (27), ஜெயராம் (24), செந்தில் (27), பழனி (21), செல்வகுமார் (23), இளையராஜா (27), மற்றொரு செல்வகுமார் (25), திருமலை (35), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (21) எனத் தெரிய வந்தது.
இதையடுத்து 17 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 செம்மரக்கட்டைகள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் திருப்பதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில் போலீசார் தனியார் கல்லூரி அருகே ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அந்தக் கல்லூரியின் பின்புறம் பதுங்கியிருந்த செம்மரக்கடத்தல்காரர்கள் திடீரென தப்பி ஓடினர். அவர்கள் விட்டுச்சென்ற ‘‘தபேலா ரக’’ செம்மரக்கட்டைகள் 6-யை போலீசார் பறிமுதல் செய்தனர்.