ரூ. 2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி - புழக்கத்தில் விட்ட 10 பேர் கைது

திருப்பதியில் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ள நோட்டுகளை எஸ்.பி. அன்புராஜன் பார்வையிட்ட காட்சி
கள்ள நோட்டுகளை எஸ்.பி. அன்புராஜன் பார்வையிட்ட காட்சி
Published on

திருப்பதி:

திருப்பதி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அதில் 14 வைர கற்களும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 501 ம் இருந்தன. அவர்களிடம் கேட்டபோது வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.

இதில் மேலும் 9 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்ததால் அவர்களை விஜயநகரம் நிடமனூர், நாரயணனபுரம் காலணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றனர்.

அங்கு 8 பேர் கொண்ட கும்பல் ஸ்கேனரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய 2 லேப்டாப், 2 கலர் பிரிண்டர்கள், 1 ஸ்கேனர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அனந்தபூரை சேர்ந்த முகமத் காஜா இம்ரான் (27), முகமத் ஆலி (55), மோகன் (40), சரண்குமார் (23), நவநீத குமார் (27), விஜயவாடா பாலகுமார் (29), பவன்குமார் (23), விசாகப்பட்டினம் மங்குநாயுடு (37), அனந்தபுரம் மாவட்டம் தர்மாவரம் மோகன் (40), ஐதராபாத் நிஜாம்பேட்டை வர்மா (50), கிருஷ்ணா மாவட்டம் கனப்பவரம் முரளி கிருஷ்ணாரெட்டி என்பது தெரியவந்தது.

மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கள்ள நோட்டு கும்பலுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எவ்வளவு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திறமையாக விசாரணை நடத்தி கள்ள நோட்டு கும்பலை பிடித்த போலீசாரை திருப்பதி எஸ்.பி. அன்புராஜன், டி.எஸ்.பி. ரவிசங்கர், ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வைர கற்கள் ரூ. 5.30 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com