என் மலர்
பொது மருத்துவம்

தீக்காயங்களும்… எச்சரிக்கை நடவடிக்கைகளும்...
- தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது.
- சமையலறை மற்றும் வீடுகளில் துணிகளில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அவைகளை அணைக்க வேண்டும்.
வீடுகளில் இல்லத்தரசிகள் சமையல் செய்யும் பொழுது, அல்லது ஆண்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஏதேனும் தீக்காயங்கள் ஏற்படக்கூடும். வீடுகளில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள் காரணமாகவும் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். அந்த வகையில் தீக்காயங்கள் ஏற்படும் போது எப்படிப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த ஆலோசனைகள் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இல்லத்தரசிகளை பொறுத்தவரை பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து சூடுபட்டுக்கொள்வது வழக்கம். அத்துடன் தண்ணீர் கொதிக்க வைக்கும் பாத்திரங்கள், துணி இஸ்திரி செய்யும் அயர்ன் பாக்ஸ், எதிர்பாராத மின்சார தாக்குதல், ஆடைகள் மற்றும் பிற பொருள்களில் தற்செயலாக தீப்பிடிப்பது ஆகியவற்றால் தீக்காயங்கள் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல் தீ விபத்து காரணமாக உடலில் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது மிகவும் அவசியம்.
• தீப்புண்கள் ஏற்பட்டு விட்டால் அதன் மீது வெண்ணை, மாவு, சமையல் சோடா ஆகியவற்றை தடவுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
• மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆயின்மென்ட், லோஷன் அல்லது எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
• தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது. அத்துடன் தீ புண்களை வெறும் கைகளால் தொடுவது துணி வைத்து துடைப்பது ஆகியவையும் கூடாது.
• தற்போது பாலிஸ்டர் மற்றும் சிந்தடிக் ஆடை வகைகள் பயன்படுத்தப்படுவதால் தீக்காயங்களின் போது அவை உருகி தோலோடு ஒட்டிக் கொள்வது வழக்கம். அந்த நிலையில் அவ்வாறு தோலில் ஒட்டிக்கொண்ட துணிகளை தாங்களாகவே அகற்ற முயற்சிக்கக் கூடாது.
இல்லத்தரசிகளை பொறுத்தவரை தீக்காயம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதில் உள்ள ஆபரணங்களை அகற்றி விடுவது நல்லது. சிறிய தீக்காயங்களாக இருந்தால் அதன் மீது நோய் தொற்று உருவாகி விடாமல் பாதுகாப்பாக சுத்தமான பருத்தித் துணியால் தீக்காயத்தின் மீது படாமல் மூடி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.
சமையலறை மற்றும் வீடுகளில் துணிகளில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அவைகளை அணைக்க வேண்டும். அப்போது தீக்காயம் பட்டிருந்தால் குளிர்ந்த நீரை தீக்காயம் பட்ட பகுதியில் மீது ஊற்றி அந்த வெப்பம் தோலை பாதிக்காத வகையில் தடுக்கலாம்.
முகம் மற்றும் கண் பகுதிகளில் ஏற்பட்ட தீக்காயம் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்ட நபரை அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது மிக முக்கியம்.
பொதுவாக தீப்புண் ஏற்பட்டால் அதன் மீது பனிக்கட்டியை பயன்படுத்தாமல் குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது. சுய மருத்துவம் செய்வது என்பது கூடாது.






