பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கு ஜாமீன்

பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கு ஜாமீன்

செல்பி புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவித்ததால் பிரித்வி ஷா மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் தாக்குதல் நடத்தினார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்வப்னா அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
Published on

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார். அப்போது, அங்கு வந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான ஸ்வப்னா கில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டுமென பிரித்வி ஷாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்விஷாவை கடுமையாக தாக்கினார். மேலும், பிரித்வி ஷாவின் காரையும் அந்த கும்பல் அடித்து உடைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பிரித்வி ஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்வப்னா கில் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்திய ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்வப்னா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, ஸ்வப்னா கில் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஸ்வப்னா கில் மற்றும் அவரது கூட்டளிகள் மேலும் 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்வப்னா அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த ஜாமீன் மனுவை விசாரித்த அந்தேரி கோர்ட்டு ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்ததையடுத்து ஸ்வப்னா விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com