திருமணம் செய்து கொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்: அனுஷ்கா

திருமணம் செய்து கொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று நடிகை அனுஷ்கா கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
திருமணம் செய்து கொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்: அனுஷ்கா
Published on

கேள்வி:- கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே?

பதில்:- சினிமாவில் அறிமுகமானபோது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில்தான் நடிப்பேன் என்ற லட்சியம், ஆசை எதுவும் எனக்கு இல்லை. அருந்ததி படத்துக்கு பிறகு அதுமாதிரி கதைகளில் என்னால் நடிக்க முடியும் என்று டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் நம்பினார்கள். அதை பயன்படுத்திக்கொண்டேன். சினிமா ஒரு கனவு உலகம். டைரக்டர் இந்த கனவு உலகத்தில் அழகான வானவில்லை உருவாக்குகிறார். அதில் நான் ஒரு வண்ணமாக இருக்கிறேன்.

கேள்வி:- சினிமாவில் நடிகைகளுக்கு கவர்ச்சி மட்டும் இருந்தால் போதுமா?

பதில்:- நிறைய பேர் சினிமாவில் நடிப்பதற்கு கவர்ச்சியும், அழகும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் சந்தோஷம் இருந்தால் முகத்தில் அழகு வந்து விடும். அழகு மனது சம்பந்தப்பட்டது. மகிழ்ச்சியாக இருந்தால் அழகு இல்லாதவர்கள் கூட அழகாக தெரிவார்கள்.

கேள்வி:- சினிமாவில் கஷ்டப்பட்ட சம்பவங்கள்.?

பதில்:- நிறைய இருக்கிறது. நடிகைகளுக்கு கண்ணீர், கஷ்டம் எதுவும் இருக்காது என்று நினைக்கிறார்கள். அது தவறு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் சிறப்பாக நடித்து இருப்பதாக நடிகைகளை பலரும் பாராட்டலாம். அதற்கு பின்னால் இருக்கும் வலியும், வேதனையும் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ‘மேக்கப்’ போடுவதற்காக மணிக்கணக்கில் நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து இரவு வீட்டுக்கு போனால் உடம்பு கடுமையாக வலிக்கும். அதை குடும்பத்தினரிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்று தனி அறைக்குள் இருந்து வேதனையால் அழுது இருக்கிறேன். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி விட்டு பிறகு குறைக்க கஷ்டப்பட்டேன். இது சாதாரண காரியம் அல்ல.

கேள்வி:- உங்கள் திருமணம் எப்போது?

பதில்:- திருமணத்துக்கு நேரம் இல்லை. ஒப்புக்கொண்ட படங்களை முடிப்பதுவரை திருமணம் பற்றி யோசிக்க மாட்டேன். ஆனால் குடும்பத்தினர் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். சினிமா முன்பு மாதிரி இல்லை. திருமணத்துக்கு பிறகும் பலர் நடிக்கிறார்கள். அதுபோல் நீயும் திருமணம் செய்துகொண்டு நடிக்கலாம் என்று அவர்கள் வற்புறுத்துகிறார்கள். கைவசம் உள்ள படங்களை முடிப்பதுவரை திருமணம் பற்றி பேச வேண்டாம் என்று அவர்களிடம் கூறிவிட்டேன்.

கேள்வி:- திருமண தடை நீங்க கோவிலில் பூஜை செய்ததாக கூறப்பட்டதே?

பதில்:- எனது குடும்பத்தினருடன் நீண்ட நாட்களுக்கு பிறகு குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டேன். அதில் வேறு முக்கியத்துவம் இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com