

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தியும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நடித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உருவாகி உள்ள இந்த படத்தில் தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும், எளிய மக்களிடமும் உள்ள பிரிவினை படிநிலை பற்றி படம் பேசுவதாக இயக்குநர் கூறியுள்ளார். அது உருவாக்கும் தாக்கத்தை பற்றியும், காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் உருவாகி இருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் `கருப்பி', `எங்கும் புகழ்' என்ற இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற செப்டம்பர் 28-ல் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #PariyerumPerumalFromSep28 #Kathir #KayalAnanthi