கதைத்திருட்டை கண்டுபிடிப்பது சவாலான ஒன்று - பா.ரஞ்சித் பேட்டி

சென்னையில் ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் பேட்டி அளித்த பா.ரஞ்சித், கதைத்திருட்டை கண்டுபிடிப்பது சவாலான செயல் என்றார். மேலும் ‘மீ டூ’ இயக்கத்திற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார். #PaRanjith #MeToo
கதைத்திருட்டை கண்டுபிடிப்பது சவாலான ஒன்று - பா.ரஞ்சித் பேட்டி
Published on

மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ஆழ்வார்பேட்டையில் குழந்தைகளுக்கான ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்த ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கேள்வி:- திரையுலகை கதை திருட்டு என்ற வி‌ஷயம் அச்சுறுத்துகிறதே?

பதில்:- இதில் நிறைய வி‌ஷயங்கள் இருக்கின்றன. உண்மை பொய் இரண்டுமே இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவாலான வி‌ஷயம். படைப்பாளி என்பவன் யார், உண்மையிலேயே அங்கிருந்து திருடினாரா என்ற கேள்வி இருக்கிறது.

அப்படி திருடிய பின்பும் அதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்ற கேள்வியும் இங்கிருக்கிறது. தான் எழுதிய கதையைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டமிடல் யாரிடமும் இல்லை. தற்போது அந்தச் சூழல் உருவாகி எல்லோருக்கும் பயம் வந்திருக்கிறது. இனி கண்டிப்பாகப் பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

கே:- சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை பற்றி?

ப:- ராஜலட்சுமி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை மேலோட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவாதி, நிர்பயா விவகாரத்தில் இருந்த அரசியல் அழுத்தம் ராஜலட்சுமி கொலை வழக்கில் இல்லை.

கே:- மீ டூ பற்றி உங்கள் கருத்து?

ப:- வரவேற்கக்கூடிய ஒன்று, அது சரியா, தவறா என்பதைப் பின்னர் பார்க்க வேண்டும். பொது வெளிகளில் பணி செய்யும் பெண்களின் பிரச்சினை குறித்துப் பேசக்கூடிய ஒரு தளமாக மீ டூ பயன்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #PaRanjith #Plagiarism #MeToo #RajalakshmiMurder

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com