

அட்டகத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நந்திதா, தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் மட்டுமே நடிக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...
ஐஸ்வர்யா ராஜேஷுடனான நட்பு எப்படி தொடர்கிறது?
அட்டகத்தி படத்தில் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம். அந்த நட்பு அப்படியே நீடிக்கிறது. அவரது வளர்ச்சி ஒரு தோழியாக எனக்கு பெருமையாக இருக்கிறது. நாங்கள் இருவருமே எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தோம். கதாநாயகி ஆனோம் என்பது இருவருக்குமே தெரியும். எனவே எங்களிடம் எந்த பொறாமையும் கிடையாது.
தொடர்ந்து அம்மா வேடங்களில் நடித்தால் இமேஜ் பாதிக்காதா?
இமேஜ் பற்றிய கவலையோ, பயமோ எனக்கு இல்லை. அசுரவதம் படத்தின் கதையே முதலில் ஐஸ்வர்யாவுக்கு தான் சென்றது. அவர் என்னிடம் படத்தை பற்றியோ, கதை பற்றியோ எதுவும் கூறாமல் நீ அம்மாவாக நடிப்பாயா? என்று மட்டும் கேட்டார். நடிக்க தயார் என்றதும் கதை கேட்க சொன்னார். நான் எந்த வேடத்திலும் நடிக்க தயார். அடுத்து டாணா என்ற படத்தில் கவர்ச்சியான மாடர்ன் கதாபாத்திரத்தில் ஐடி பெண்ணாக நடிக்கிறேன். வணங்காமுடியில் போலீஸ் வேடம். கதையில் நமது கதாபாத்திரம் முக்கியமானதா, இல்லையா என்பதை தான் பார்க்கிறேன்.
அட்டகத்திக்கு பிறகு ரஞ்சித் உங்களை நடிக்க வைக்கவில்லையே?
அதன் பிறகான அவர் படங்களில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை. எனக்கே அது தோன்றியது. என்னை அறிமுகப்படுத்தியதே அவர் தான். எனவே எனக்கு பொருத்தமான வேடம் இருந்தால் கண்டிப்பாக அழைப்பார். இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
சென்னையில் எப்போது வீடு வாங்கி செட்டில் ஆகப்போகிறீர்கள்?
எப்போது சென்னையில் நான் நடிக்கும் 4 படங்களுக்கான படப்பிடிப்பு நடக்கிறதோ, அப்போது வாங்கி செட்டில் ஆகிவிடுவேன்.
காதல்?
அதற்கு எல்லாம் நேரமே இல்லை. தொடர்ந்து படப்பிடிப்புகளில் தான் இருக்கிறேன். #NanditaSwetha