

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படம் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது.
படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகிய 3 பேரின் நகைச்சுவை காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசித்து பார்க்கப்பட்டது. அதிலும் வாழைப்பழ காமெடி, அந்த கேள்விய ஏன்டா என்கிட்ட கேட்ட உள்ளிட்ட காமெடிகள் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.
இதுகுறித்து கங்கை அமரன் கூறும்போது, “கரகாட்டக்காரன் 2-ம் பாகம் எடுப்பது குறித்து ராமராஜன் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் பேசி வருகிறோம். இப்போதைய நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.