நடிகை கடத்தல் வழக்கில் கைதாகும் திலீப்பின் உறவினர்

நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் உறவினர் நாதிர்ஷாவுக்கு தொடர்பு இருப்பதால் அவர் விரைவில் கைது செய்யவிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை கடத்தல் வழக்கில் கைதாகும் திலீப்பின் உறவினர்
Published on

ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்ட திலீப்புக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அவர், ஜெயிலில் உள்ளார்.

திலீப் கைது செய்யப்பட்ட போது அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் யாரும் அவரை ஜெயிலுக்கு சென்று சந்திக்கவில்லை. இதனால் திலீப் ஜெயிலுக்குள் மனம் உடைந்து காணப்பட்டார்.

ஓணப்பண்டிகையின் போது நடிகர் ஜெயராம் ஜெயிலுக்கு சென்று திலீப்பை சந்தித்தார். அப்போது அவருக்கு ஓணப்பட்டும் பரிசளித்தார். ஜெயராம் சென்று வந்த பிறகு மலையாள திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவராக திலீப்பை சந்திக்க சென்றனர்.

குறிப்பாக நடிகர்கள் விஜயராகவன், சுதீர், ஹரிஸ்ரீ அசோகன், கலாபவன் சஜன், தயாரிப்பாளர் ரஞ்சித், சினிமா கதாசிரியர் பென்னி பி நாயரம்பலம், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்பட பலரும் திலீப்பை சந்தித்து பேசினர்.

ஓணத்திற்கு பிறகு நேற்று வரை திலீப்பை சந்திக்க தினமும் 20-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஜெயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் ஜெயில் அதிகாரிகள் திலீப்பை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தனர்.

நெருங்கிய உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திலீப்பை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். நேற்று திலீப்பை சந்திக்க வந்த பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை ஆலுவா ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நடிகை வழக்கில் திலீப்பின் நெருங்கிய உறவினரும், சினிமா நடிகர், தயாரிப்பாளருமான நாதிர்ஷாவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக நாதிர்ஷாவிடம் விசாரணை நடந்தது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு நாதிர்ஷா, கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கோர்ட்டு வருகிற 13-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com