நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு

நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
Published on

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபல ரவுடியும், திரையுலக பிரபலங்களுக்கு டிரைவராக இருந்தவருமான பல்சர் சுனிலும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் திலீப் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். 85 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு கடந்த வாரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், திலீப் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யாததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் நடிகை கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பான கூடுதல் தகவல்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.

குறிப்பாக இந்த வழக்கில் திலீப் மீது போலீசார் குற்றம் சாட்டுவது ஏன்? என்பதற்கான ஆதாரங்களை இணைக்கவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, கூட்டு கற்பழிப்பில் திலீப்பின் பங்கு, குற்றச்சதி, கடத்தல், ஆதாரங்களை அழித்தல், குற்றவாளியை பாதுகாத்தல், குற்ற ஆவணங்களை பதுக்கியது மற்றும் மிரட்டல், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்றவை குறித்து புதிய குற்றப்பத்திரிகையில் தகவல்கள் இடம் பெறுமென்று தெரிகிறது.

கூடுதல் குற்றப்பத்திரிகையில் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலுக்கு பதில், நடிகர் திலீப்பின் பெயர் இடம் பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்காக போலீசார் குற்றச்செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களுடன் கூடிய சான்றுகள், கோர்ட்டில் அளிக்கப்பட்ட ரகசிய வாக்குமூலங்களின் நகல், தடய அறிவியல் வல்லுனர்களின் அறிக்கை, சைபர் கிரைம் போலீசாரின் அறிக்கை, நேரடி மற்றும் மறைமுக சாட்சிகள் குறித்த ஆதாரங்கள் ஆகியவையும் இந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்படுகிறது.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை போலீசார் அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அடுத்த வாரம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் திலீப்பின் ஜாமீன் ரத்தாகவும் வாய்ப்பு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம் அடுத்த வாரம் இந்த வழக்கு மேலும் பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் அவர் மீண்டும் சேர்க்கப்படுவாரா? என்று ‘அம்மா’வின் தலைவரான நடிகர் இன்னசென்ட்டிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு இன்னசென்ட் நேரடியாக பதில் அளிக்க மறுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com