மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்

மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வீட்டை காலி செய்ய மறுப்பதாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார். #Vijayakumar #Vanitha
மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்
Published on

நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் ஏராளமான அறைகள் உள்ளன. சினிமா படப்பிடிப்புக்காக இந்த பங்களா வீடு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்த வீட்டை, விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மகள் வனிதாவுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். படப்பிடிப்பு ஒன்றுக்காக வனிதா இந்த வீட்டை தந்தையிடம் கேட்டுப் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விஜயகுமார், வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக வனிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் வீட்டில் எனக்கும் பங்கு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அது தொடர்பான ஆவணங்கள் இருந்தால் தாக்கல் செய்யுங்கள் என்று வனிதாவிடம் போலீசார் கேட்டுள்ளனர்.

இதற்கிடையே நடிகை வனிதா, ஆலப்பாக்கம் வீட்டுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் மோதலில் ஈடுபட்டார். அவதூறாகவும் பேசினார்.

நடிகை வனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தனது குடும்ப விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் தனது குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில் சொத்து தகராறு தொடர்பாக விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com