நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் - விஷால் கருத்துக்கு நடிகர் உதயா கண்டனம்

நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும் என்று நடிகர் உதயா விஷால் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Vishal #Udhaya
நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் - விஷால் கருத்துக்கு நடிகர் உதயா கண்டனம்
Published on

நடிகர் விஷால் நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு பக்கபலமாக இருந்தவர் நடிகர் உதயா. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

உதயா நடிப்பில் கடந்த ஆண்டு உத்தரவு மகாராஜா என்ற படம் வெளியானது. இந்த படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததற்கு தயாரிப்பாளர் சங்கம் தான் காரணம் என்று உதயா குற்றம்சாட்டினார். நேற்று விஷால் அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறி இருந்தார்.

அந்த படம் நன்றாக இல்லை. அதனால் ஓடவில்லை என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விஷாலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உதயா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் தாங்கள் அளித்த பேட்டியில், உத்தரவு மகாராஜா திரைப்படத்தை சரியான கதைகளம் இல்லாததால், வெறும் நான்கு பேர் மட்டுமே இப்படத்தை பார்த்ததாக கூறியிருந்தீர்கள். நான் அனைவருடைய கருத்துகள், விமர்சனங்கள் அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதை மதிக்கிறேன், பாராட்டுகிறேன்.

விமர்சனங்களில் இருக்கும் நல்ல வி‌ஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஆனால், நான் கண்மூடித்தனமான விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. துரதிருஷ்டவசமாக எனது படத்தை குறித்த உங்கள் விமர்சனமும் அவ்வாறானதே. ஏனென்றால், நீங்கள் அந்தப்படத்தை பார்க்கவில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.

எனது படத்தை திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் அவதியுற்றேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், அந்த பேரிடருக்கு வழிவகுத்ததே நீங்கள் தான்.

இதற்கு நான் எனது ஆயுள் உள்ளவரை நன்றி உள்ளவனாக இருப்பேன். எனது படத்திற்கு திரைத்துறையினர்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து ஊடகங்களிடம் இருந்தும் நேர்மையான விமர்சனங்கள் கிடைத்திருக்கிறது.

இந்த நேர்மையான விமர்சனங்கள் எனக்கு திருப்தி அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது. ஏனென்றால், இந்தப்படம் சராசரிக்கும் அதிகமான வியாபாரத்தை எனக்கு தந்திருக்கிறது. மிக குறைவான திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டிருந்த போதும், மக்கள் அதை ரசித்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் விமர்சனங்கள் தனி நபர் தாக்குதலாகவோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ இருக்க கூடாது.

ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருந்த நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும். சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. ‘விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும்’ என்ற எளிய பிரபஞ்ச விதியை நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Vishal #Udhaya

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com