கும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை

சமூக விலகலை கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகரை அடித்து உதைத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரியாஸ்கான்
ரியாஸ்கான்
Published on

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படியும் அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள பனையூரில் வசித்து வரும் நடிகர் ரியாஸ்கான்(வயது 47) நேற்று காலை அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு பெண் உள்பட 5 பேர் கூட்டமாக சென்றனர்.

இதை கண்ட நடிகர் ரியாஸ்கான், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு போட்டு இருப்பதுடன், சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அதை கடைப்பிடிக்காமல் இப்படி கும்பலாக செல்லலாமா? என தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் திடீரென ரியாஸ்கானை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரியாஸ்கான் கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் ரியாஸ்கானை தாக்கிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com