

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன விலையை ஏப்ரல் மாதம் உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. உள்ளீடு செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை ஈடுசெய்யும் வகையில் விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்படுவதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு காரணமாக டாடா நிறுவனத்தின் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் (ICE) கொண்ட கார்களின் விலை 0.5 சதவீதம் வரை அதிகரிக்கிறது. எனினும், சரியான விலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்ட்-ஐ பொருத்து வேறுபடும். மாற்றப்பட இருக்கும் விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.
ஹேட்ச்பேக், எஸ்.யூ.வி. மற்றும் செடான் என பலவகை பயணிகள் வாகனங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஐ.சி. என்ஜின் கொண்ட பிரபல டாடா கார்களின் பட்டியலில் டியாகோ, டிகோர், அல்ட்ரோஸ், பன்ச், நெக்சான், ஹரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
உதிரி பாகங்கள் மற்றும் நிர்வாக செலவீனங்கள் அதிகரிப்பதால், விலை மாற்றம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக டாடா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. விலை உயர்த்தப்பட்டாலும், டாடா நிறுவனம் தனது வாகனங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரத்தை உறுதிப்படுத்தும் என்று தெரிகிறது.