குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

Published on

வீரமான விருச்சிக ராசியினரே இதுவரை ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆறாமிடம் நோக்கிச் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

ஆறாமிட குருவின் பலன்கள் : விருச்சிக ராசிக்கு இரண்டு, ஐந்தாம் அதிபதி குரு ஆறாமிடம் செல்கிறார். ஆறாமிடம் என்பது நோய், எதிரி, கடன், தடை, ஏமாற்றம், வழக்குகள், சுயமரியாதை பற்றிக் கூறுமிடம். தனாதிபதி மற்றும் பஞ்சமாதிபதி குரு ஆறாமிடம் செல்வதால் சுப பலன் சற்று மட்டுப்படும்.எங்கு சென்றாலும் தலைமைப் பொறுப்பில் இருக்க விரும்பும் உங்கள் பதவியை தட்டிப் பறிக்க புதிய எதிரிகள் உருவாகுவார்கள். சிலருக்கு பரம்பரை கவுரவப் பதவி கிடைப்பதில் தடை, தாமதம் உண்டாகும். பூர்வீக சொத்தில் வம்பு வழக்கு உருவாகலாம் அல்லது குழந்தைகளுக்கான வைத்திய செலவு, கல்விச் செலவு, சுப காரியச் செலவு அதிகரிக்கும்.

சிலர் அதீத பக்தியால் கடன் பெற்று கோவில், ஆன்மீக காரியத்திற்கு செலவு செய்து கடன் அதிகமாகும். சிலருக்கு குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உருவாகலாம். தாய் மாமன் உறவில் விரிசல் உண்டாகும். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி புதியதாக தலைதூக்கும்.ஆறில் குரு ஊரில் பகை என்பது பழமொழி. குரு நின்ற வீட்டு பலன்கள் சற்று மட்டுப்பட்டாலும் பார்வை பதியும் தன ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானம் மூலம் ஏற்றமான பலன்களும் உண்டு.மாற்றம் ஒன்றே மாறாதது. கோட்சாரம் சற்று சுமாராக இருக்கும் போது பிரச்சனையை விட்டு ஒதுங்கி வாழப் பழகினால் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு எந்த கெடு பலனும் ஏற்படாது. முக்கிய பணிகள் ஆரம்பத்தில் தடை, தாமதங்களைத் தந்ததும் முடிவில் காரிய அனுகூலத்தை தந்து விடும். சக்திக்கு மீறிய கடன், தேவையற்ற பேச்சைக் குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள் :

ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பதிகிறது. சிலர் கடன் பட்டு புதிய தொழில் துவங்கலாம் அல்லது தொழிலை விரிவு செய்யலாம் அல்லது புதிய தொழில் கிளைகள் திறக்கலாம்.சிலர் வொர்க்கிங் பார்ட்னராக புதிய கூட்டுத் தொழிலில் சேரலாம். சிலருக்கு சட்ட விரோதமான தொழில் செய்யும் ஆர்வம் ஏற்படும். அரசு தரப்பில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் ஏஜென்ஸி நடத்துபவர்கள் அரசின் சட்ட திட்டங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். மனதிற்கு பிடிக்காத வேலையில் இருந்தவர்களுக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள் :

ராசிக்கு 12ம்மிடமான விரய, அயன, சயன மோட்ச ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் சிலர் வாழ்வாதாரத் தேவைக்காக, உயர் கல்விக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர் வெளிநாடு செல்ல நேரும்.தடைபட்ட இடமாற்றம், ஊர் மாற்றம் இப்பொழுது எளிதாக நடைபெறும். சிறை தண்டனை அனுபவிப்பவர்கள் நன் நடத்தையால் விடுதலையாவார்கள். வயது முதிர்ந்தவர்கள் ஆன்மீகப் பணியாற்றுவார்கள். காசி, ராமேஸ்வரம், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று வரலாம். சிலர் மன நிம்மதிக்காக வெளியூர் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் வீட்டிற்கு சென்று சிறு காலம் தங்கி வரலாம். வீடு, வாகனம், பிள்ளைகளின் கல்யாணம், காட்சி என சுப விரயம், சுப கடன் அதிகரிக்கும். சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு பராமரிப்பு செலவு அதிகமாகும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள் :

ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் ஒன்பதாம் பார்வை கிடைப்பதால் குடும்ப உறவுகளிடம் இருந்த மனக்கசப்பு, குழப்பமான சூழ்நிலை மாறும். உங்கள் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு. எதிரிகள் ஓடி ஒழிவார்கள். மனைவி, மக்கள் மூலம் குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்ப தேவைகள் நிறைவேறும். இல்லையென்ற நிலை இனி இல்லை.மங்களகரமான சுப நிகழ்ச்சிகள், விருந்தினர் வருகை உண்டாகும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்லலாம். சிலருக்கு கண் தொடர்பான உபாதைக்கு அதிக வைத்தியம் செய்ய நேரும். பேச்சை மூலதனமாக கொண்ட வழக்கறிஞர்கள்,ஆசிரியர்கள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், மார்கெட்டிங் , உணவுத் தொழில், ஹோட்டல் போன்ற துறையிலிருப்பவர்கள் நல்ல ஏற்றம் பெறுவார்கள்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு பனிரெண்டில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வெளியூர் வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் தடை உண்டாகும்.தடை, தாமதங்கள் உருவாகும் . எந்த செயலிலும் முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் மன சஞ்சலம் , மனக்குழப்பம் ஏற்படும். உங்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் சிற்சில மாற்றங்கள் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் இரட்டைத் தன்மை இருக்க தான் செய்யும். வெளிநாட்டவர் தொடர்பு ஏற்படும். புதிய பாஷை கற்கும் ஆர்வம் உருவாகும்.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்  22.6.2023 முதல் 17.4.2024 வரை

விருச்சிக ராசிக்கு ஏழு, பனிரெண்டாம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. திருமண விஷயத்தில் மன வேதனை உருவாகலாம். விருப்பம் இல்லாத் திருமணம், சுய விருப்ப விவாகம் ஏற்படும். உங்களின் நட்பு வட்டாரத்திலுள்ளவர்களில் நல்லவர்கள் யார்? நல்லவர் போல் பாசாங்கு செய்பவர் யார்? என்று உணருவீர்கள்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

விருச்சிக ராசிக்கு பத்தாம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் நிதி நிர்வாகம் ,நீதித்துறை, வழக்குரைஞர்கள், நீதிபதிகள், ஆடிட்டர்கள் அதிக அளவிலான நன்மை அடைவார்கள். வாடிக்கையாளர்கள் உங்களுக்கு முழு ஆதரவு வழங்குவார்கள். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

குருவின் வக்ர பலன்கள் :

4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் நிலையற்ற வருமானம், கடனால் கவலை, அதிகமான வைத்தியச் செலவு உண்டு.குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழநேரும்.கெட்ட சகவாசம், தீய பழக்கம் உருவாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாது. பிறரை இகழ்வது, போட்டுக் கொடுப்பது, பொய், புரளி பேசுவது போன்றவற்றால் நிலையற்ற உத்தியோகமே அமையும்.

பெண்கள் :

தம்பதிகளுக்குள் நிலவிய பனிப்போர் விலகி குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிறப்பாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் :

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் கூடுதல் மதிப்பெண் பெற முடியும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.ஆரம்பக் கல்வி பயிலும் மாணவ மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் :

பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளை பகைக்காமல் அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம். அதே போல் வெறுப்பை உங்களுக்கு கீழ் உள்ளவர்களிடமும் காட்டக் கூடாது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சம்பளம் பற்றிய எதிர்பார்ப்பைத் தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே பணியில் .உள்ளவர்கள் சம்பள உயர்வு, பணி உயர்வு, இடப்பெயர்ச்சி ஆகியவற்றில் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இருத்தல் நலம்.

ராகு/கேது பெயர்ச்சி :

அக்டோ பர் 30, 2023ல் ராகு உங்கள் ராசிக்கு 5ம் இடத்திற்கும் கேது 11ம் இடத்திற்கும் செல்கிறார். பைனான்ஸ் தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி அமோகமாக இருக்கும் .வெளிநாட்டு வருமானம் கிடைக்கும். குடும்பத்திற்கு புதிய உறுப்பினர் வருகை ஏற்படும். குழந்தை பேறு கிடைக்கும்.

பரிகாரம் :

இந்த குருப் பெயர்ச்சியால் குரு நின்ற இடத்தை விட பார்வை பெற்ற இடங்கள் உங்களை பலம் பெறச் செய்கின்றது. சனி நின்ற இடமும் பார்வை பெறும் இடங்களும் உங்களை பலம் இழக்கச் செய்கின்றன. சனிக்கிழமை தோறும் நவக் கிரகத்தை குறைந்தது 21 முறை வலம் வர வேண்டும். சனிக்கிழமை அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்து வர எந்த வினையும் உங்களை நெருங்காது.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com