null
2025 REWIND: வரி - அரசின் கட்டாயக் கொள்ளை?தவிர்க்க முடியாத உறவினர்?
- வரி என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான வருவாய் ஆதாரம்
- இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த வரிச்சுமை இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டது
இன்னும் சிலநாட்களில் நாம் புத்தாண்டை பூரிக்க இருக்கிறோம். அதாவது 2025 முடியப் போகிறது. ஒவ்வொரு வருடம் முடியும்போதும் அந்த வருடத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நினைவுக்கூறுவோம். அப்படிதான் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை, அதாவது நீங்கள் டிரெண்ட் செய்த முக்கிய நிகழ்வுகளை, தகவல்களை உங்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறோம்.
அந்த வரிசையில் இன்றைய தலைப்பு 'வரி'. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு என விஜயகாந்த் கூறியதுபோல வரி என்ற வார்த்தையே கேட்டாலே அனைவருக்கும் ரத்தம் கொதிக்கும் அளவிற்கு கோபம் வரலாம். அனைவரின் கோபமும் நியாமானதுதான். மக்களின் இந்த கோபத்திற்கு காரணம் என்ன?
வரி என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாகும். இந்த நிதியைக் கொண்டே அரசாங்கம் பொதுச் சேவைகளான சாலைகள் அமைத்தல், மருத்துவமனைகள், பள்ளிகள், பாதுகாப்பு மற்றும் பிற நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால் நம் நாட்டில் இருக்கும் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகளின் நிலை என்ன? பாதுகாப்பு குறித்து பேசவேக்கூடாது. அந்த நிலைமை.
நாம் கடையில் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்கி செல்லும்போது, அந்தப் பொருள் சரியில்லை என்றால் மறுநாள், ஏன் அந்த நாளே வந்து கடைக்காரரை உண்டில்லை என ஆக்கிவிடுவோம். அப்படி இருக்கையில் நமக்கான அடிப்படை தேவைகளுக்காக நாம் செலுத்தும் வரி பயனற்று போகும்போது யாருக்குதான் ஆத்திரம் வராது?. அதனால் உங்களின் கோபம் நியாயமானதுதான். இந்தக் கதையை தொடர்ந்தால் சென்றுக்கொண்டே இருக்கும். அதனால், அதைவிடுத்து இந்த கட்டுரைக்கான தலைப்புக்குள் வருவோம்.
இந்தாண்டு பேசப்பட்ட, கூகுளில் தேடப்பட்ட முக்கிய தலைப்புகளில் ஒன்று வரி. ஏன்? இந்திய அரசு வரியை குறைத்தது. அதாவது நான்கு அடுக்குகளாக இருந்த வரிச்சுமையை, இரண்டு அடுக்குகளாக குறைத்தனர். இந்த நடைமுறை கடந்த செப்டம்பர் முதல் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் கொஞ்சம் செலவு குறையும் என மகிழ்ந்தனர். மற்றொன்று அமெரிக்க அரசின் வரிவிதிப்பு. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல, உள்நாட்டு வரியையே தாங்கமுடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு, அமெரிக்கா மேலும் ஒரு குண்டை வீசியது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அதாவது இந்தியப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா அரசு அதிகரித்தது. இந்தியப் பொருட்களின் மீது கூடுதல் 25% வரி விதித்து, மொத்த வரிகளை 50% ஆக உயர்த்தியது. கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் என்பதுபோல இதற்கு ரஷ்யாவை எல்லாம் காரணம் கூறியது அமெரிக்கா. இது போதாது என்று, நீங்கள் இன்னும் நிறைய வரிகளை பார்க்கப்போகிறீர்கள் என்றும் டிரம்ப் கூறுகிறார். மக்களின் அச்சத்திற்கு காரணம் அந்த வரியை ஈடுகட்ட நம்மீது தாக்கம் வெளிப்படுத்தப்படும் என்ற எண்ணம்தான்.
நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? என்ற திரைப்பட டயலாக்தான் மக்களின் நிலை. ஏனெனில் கொடுப்பவர்களும் அவர்கள்தான். அடிவாங்குபவர்களும் அவர்கள்தான்.
இப்படித்தான் டிரெண்டானது வரி.