இன்று பிரபோத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எமலோகத்தை மிதிக்க மாட்டார்கள்

ஸ்ரீமகாவிஷ்ணு இன்று (வெள்ளிக்கிழமை) துயில் எழுகிறார். ஸ்ரீவிஷ்ணு துயில் எழுப்பும் பாட்டுகளைப்பாடி ஸ்ரீமகாவிஷ்ணுவை எழுப்ப வேண்டும்.
இன்று பிரபோத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எமலோகத்தை மிதிக்க மாட்டார்கள்
Published on

ஐப்பசி மாதத்தில் வருகிற வளர்பிறை ஏகாதசிக்கு உத்தான ஏகாதசி, பிரபோத ஏகாதசி, பாசாங்குச ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு. ஸ்ரீமகாவிஷ்ணு இன்று (வெள்ளிக்கிழமை) துயில் எழுகிறார். ஆகவே இன்றைய ஏகாதசிக்கு பிரபோத ஏகாதசி, உத்தான ஏகாதசி எனப் பெயர்.

இன்று அதிகாலை ஸ்ரீமகாவிஷ்ணு சன்னதியில் தீபம் ஏற்றி வைத்து பழம், பூக்கள், மஞ்சள், குங்குமம், பசுமாடு, கறிகாய்கள், தங்கம், ரத்னங்கள் போன்ற மங்கள திரவியங்களை வைத்து, சாத்திய கதவின் முன்பாக பக்தியுடன் ஸ்ரீவிஷ்ணு ஸ்தோத்ரம் - சுப்ரபாதம் சொல்லி அல்லது ஸ்ரீவிஷ்ணு துயில் எழுப்பும் பாட்டுகளைப்பாடி ஸ்ரீமகாவிஷ்ணுவை எழுப்ப வேண்டும்.

அதன்பிறகே பூஜை அறையின் கதவைத் திறக்க வேண்டும். பிறகு விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி வணங்க வேண்டும். இதனால் சகல செல்வங்களையும் தரும் ஸ்ரீவிஷ்ணுவின் அருள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

இன்றைய ஏகாதசிக்கு பாசாங்கு ஏகாதசி என்றும் பெயர் உண்டு.

இந்த ஏகாதசிக்கு அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி உண்டு. எனவே இந்த ஏகாதசியில், பத்மநாப மூர்த்தியை பூஜிக்க வேண்டும். இந்த ஏகாதசி விரதம் உலகத்தில் உள்ள எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் தரும். ஏகாதசி அன்று இரவு, ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எமலோகத்தை மிதிக்க மாட்டார்கள். விரதம் இருந்து அன்னம், நீர், குடை, பாதரட்சை ஆகியவற்றை தானம் செய்வது சிறந்த பலனை அளிக்கும். ஏகாதசி முடிந்து நாளை மறுநாள் துவாதசி பாரணை செய்ய வேண்டும். இந்த துவாதசிக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர். நாளைய மறுநாள் துளசி பூஜை செய்வது மிகச் சிறப்பு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com