கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை- ரியல் எஸ்டேட் அதிபர் கைது

திசையன்விளை அருகே கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை- ரியல் எஸ்டேட் அதிபர் கைது
Published on

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்தவர் கணபதி பாண்டியனின் மகன் சந்தோஷ் ராஜா (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நண்பருடன் சேர்ந்து குளிர்பான ஏஜெண்டு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி கவிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில் 1-ந் தேதி இரவு சந்தோஷ் ராஜாவின் வீட்டிற்கு ஒரு காரில் 5 பேர் கும்பல் வந்தது. அப்போது வீட்டில் சந்தோஷ் ராஜா மட்டும் இருந்தார். உடனே அந்த கும்பல் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி காரில் ஏற்றி சாத்தான்குளம் நோக்கி கடத்திச்சென்றது. வழியிலேயே அவரை 5 பேரும் சரமாரியாக தாக்கினர். பின்னர் படுகாயத்துடன் அவரை சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு தப்பி சென்று விட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் ராஜா உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக கணபதி பாண்டியன் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகநேரியை சேர்ந்த சிவராமன், தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ், சங்கரமூர்த்தி, பூவேஸ், பாலா ஆகிய 5 பேரை பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் சந்தோஷ் ராஜா கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட சந்தோஷ் ராஜாவின் அத்தை வீடு ஆறுமுகநேரியில் உள்ளது. இதனால் அவர் ஆறுமுகநேரிக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணன் என்பவரின் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் சந்தோஷ் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுடன் முகநூலிலும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. உடனே அவர் சந்தோஷ் ராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு பலமுறை எச்சரித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் ராஜா, ராதாகிருஷ்ணன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் சேர்ந்து சந்தோஷ் ராஜாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்கு ஏதுவாக சந்தோஷ் ராஜாவின் பெற்றோர் நெல்லையில் உள்ள இளைய மகனின் வீட்டில் தங்கியிருந்தது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் ராஜாவை கூலிப்படையை ஏவி காரில் கடத்திச்சென்று கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திசெல்வி மற்றும் போலீசார் கூலிப்படையைச் சேர்ந்த சிவராமன் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணன் மற்றும் இதில் தொடர்புடைய சிலரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த ராதாகிருஷ்ணனை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர். அவரை உவரி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தோஷ் ராஜா கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com