முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்
Published on

ஷார்ஜா:

தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 33.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வியான் முல்டர் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவில் வெளியேறினர். 4 வீரர்கள் டக் அவுட்டாகினர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரூக்கி 4 விக்கெட்டும், காசன்ஃபர் 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 26 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குல்பதீன் நயீப் 34 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்சாய் 25 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com