மனைவியின் கரங்களை துண்டித்த அரசன்

பல்லவ மன்னர்களின் வழி வந்த கழற்சிங்கர், சிவபெருமானின் மீது அளவற்ற பக்தி கொண்டவர். இவரது வாழ்க்கையில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
மனைவியின் கரங்களை துண்டித்த அரசன்
Published on

திருவாரூர் ஆலயத்தை அடைந்ததும், அந்த ஈசனின் அருளில் மூழ்கி தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரத்தில் கழற்சிங்கரின் பட்டத்து அரசி கோவிலை வலம் வரத் தொடங்கினாள். ஆலயத்தில் இருந்த மணி மண்டபத்தில் அமர்ந்து சிலர் இறைவனின் வழிபாட்டிற்காக மலர்களைத் தொடுத்து மாலையாக்கிக் கொண்டிருந்தனர். அந்தப் பணியில் இருந்தவர்களின் முன்பு, மலர்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.

கண்ணைக் கவரும் வண்ணத்தையும், கருத்தைக் கவரும் நறுமணத்தையும் கொண்டிருந்த அந்த மலர்களைக் கண்டதும், அரசிக்கு ஆனந்தம் மேலிட்டது. அவள் அங்கிருந்த மலர்களில் ஒன்றிரண்டை எடுத்து மூக்கின் அருகில் வைத்து நறுமணத்தை நுகர்ந்துப் பார்த்தாள்.

அந்த மணிமண்டபத்தில் அமர்ந்து இறைவனுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தவர்களில் செருத்துணை நாயனாரும் ஒருவர். அவர் அரசியின் செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். இறைவனுக்கு செலுத்தப்படும் மலர்களை எடுத்து வாசம் பிடிப்பதா? என்று எண்ணியவர், அரசி என்றும் பாராமல் தன் கையில் இருந்த சிறு வாளைக் கொண்டு அவளது மூக்கை வெட்டினார்.

மூக்கை இழந்த அரசி, வலியால் அலறித் துடித்தாள். அவளது கதறல், ஆலயத்தையே கலங்கடித்தது. சத்தம் கேட்டு தியானத்தில் இருந்து விழித்த கழற்சிங்கர், தன் பணியாட்களை விட்டு, ‘என்ன சத்தம் அது?’ என்று பார்த்து வரும்படி பணித்தார். காவலர்கள் சென்று பார்த்தபோது, அங்கு அரசியார் மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். இதுபற்றி உடனடியாக கழற்சிங்கரிடம் தெரிவித்தனர். அவருக்கு ஆத்திரம் உண்டானது.

‘அரசி என்று தெரிந்தும், அவளின் மூக்கை ஒருவன் வெட்டியிருக்கிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்’ என்று நினைத்தவர், மணிமண்டபத்தை வந்தடைந்தார். அங்கு தன் மனைவியின் அருகில் ருத்ராட்சம் அணிந்து, காவியாடை தரிசித்திருந்த ஒருவர் கையில் சிறிய வாளுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார்.

ஒரு சிவ பக்தர், கோபம் கொள்ளும் வகையில் ஏதோ நடந் திருக்கிறது என்பதை உணர்ந்த கழற்சிங்கர், ‘இந்தக் கொடிய செயலைச் செய்தது யார்?’ என்று கேட்டார். அதற்கு செருத்துணை நாயனார், ‘வேந்தே! அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்தார். அதன் காரணமாகவே அவரது மூக்கை நான் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது’ என்றார்.

தன் மனைவி செய்த பிழையை அறிந்து கொண்ட மன்னன், செருத்துணை நாயனாரிடம், ‘ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை. கையில் எடுக்காமல் மலரை எவ்விதம் முகர்ந்து பார்க்க இயலும். எனவே முதலில் தவறு செய்த கைக்கு தாங்கள் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே!’ என்று கூறியபடியே, தன்னுடைய உடைவாளை எடுத்து தன் மனைவியின் வலது கரத்தை வெட்டினார்.

தன்னைக் காட்டிலும் உயர்ந்தசிவபக்தி கொண்ட கழற்சிங்கரை நோக்கி, தலை வணங்கினார் செருத்துணை நாயனார். அப்போது சிவபெருமான் இடப வாகனத்தில் உமாதேவியுடன் அங்கு எழுந்தருளினார். பட்டத்து அரசியின் துன்பத்தை நீக்கி அருளினார். மேலும் மன்னனின் சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் மெச்சிய இறைவன், அனைவருக்கும் ஆசி கூறி மறைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com