

வாஷிங்டன்:
ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்றபோது அவரை அமெரிக்கா ஏவுகணை வீசி கொன்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. ஈராக்கில் உள்ள அமெரிக்கா படை தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது சிறிது நேரத்தில், ஈரானின் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு புறப்பட்டு சென்ற விமானம் திடீரென்று தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இதில் 176 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்கள் மற்றும் கனடாவை சேர்ந்தவர்கள்.
முதலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக ஈரான் தெரிவித்தது. ஆனால் உக்ரைன் விமானத்தை ஈரானே ஏவுகணையால் தாக்கி வீழ்த்தி உள்ளது என்று அமெரிக்கா, கனடா குற்றம் சாட்டியது.
இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் கூறுகையில், விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் தாக்கியதற்கான ஆதாரங்கள் பல்வேறு உளவுத்துறைகள் மூலம் எங்களுக்கு கிடைத்து உள்ளது. தவறுதலாக விமானத்தை தாக்கி உள்ளனர் என்றார். ஆனால் அந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்தது.
விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் திடீரென்று ஈரான், விமானத்தை தாங்கள்தான் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டோம் என்று ஒப்பு கொண்டது. மனித தவறால் நடந்ததாகவும் இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் ஈரான் தெரிவித்தது.
இதுபற்றி ஈரான் ராணுவம் தரப்பில் கூறும் போது, ராணுவ பகுதிக்கு அருகே பறந்த பயணிகள் விமானத்தை தாக்குதல் நடத்த வந்த எதிரிநாட்டு விமானம் என்று தவறுதலாக நினைத்து ஏவுகணையால் தாக்கி விட்டோம். அமெரிக்காவுடன் ஏற்பட்ட உச்சக்கட்ட பதற்றத்தில் மனித தவறாலும், தற்செயலாகவும் விமானம் தாக்கப்பட்டுவிட்டது என்று கூறி உள்ளது.
இரு நாடுகளின் போர் பதற்றத்தில் அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டது. பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களுக்கு ஈரான், உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஈரானுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி கூறும்போது, விமானத்தை தாக்கியதற்காக ஈரானுக்கு தண்டனை வழங்கவேண்டும். இந்த சம்பவத்துக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் இவ்விவகாரத்தில் உக்ரைனின் நிபுணர்கள் 45 பேர் முழு விசாரணை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் கூறுபோதும், பலியானவர்களுக்காக கனடா நாடு துக்கம் கடைபிடிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு நிதி கிடைக்க வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
அதேபோல் ஜெர்மனி, சுவீடன் உள்ளிட்ட நாடுகளும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.
இந்த நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஈரான் அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது மக்கள், உங்களுக்கு (ஈரான் அரசு) வெட்கமில்லை பொய் சொன்னவர்களுக்கு மரணம் என்று கோஷம் எழுப்பினர். விமானம் வீழ்ந்தப்பட்டதில் தொடர்புடைய அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.