

திருப்பதி:
சித்தூர் மாவட்டம், மொலகலசெருவு போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை முறைபடி விசாரித்ததில், அவர்கள் செம்மரம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் விசாரித்ததில், செம்மரக் கடத்தலுக்கு, திருப்பதி எம்.ஆர்.பள்ளி போலீஸ் நிலையத்தை சேர்ந்த லோகேஷ், தர்மேந்திரா என்ற 2 போலீசார் தங்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தூர் போலீசார், கடத்தல் கும்பலுக்கு துப்பு கொடுக்கும் 2 போலீசாரை கையும் களவுமாக பிடிக்க அவர்களை கண்காணித்து வந்தனர்.
செம்மரங்களை வெட்டி கடத்தி செல்லும் வாகனத்தின் முன்பு பைக்கில் சென்று போலீஸ் சோதனை நடக்கிறதா? என வேவு பார்த்து கடத்தல் கும்பலுக்கு செல்போன் மூலம் உளவு சொல்லும் வேலையில் அவர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லோகேஷ், தர்மேந்திரா ஆகிய 2 போலீசாரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதேபோல், போலீஸ் துறையில் செம்மரக்கடத்தல் கும்பலுக்கு துப்புக்கொடுக்கும் பணியில் போலீசார் யாரேனும் ஈடுபட்டு உள்ளனரா? என கண்டு பிடிக்க திருப்பதி, சித்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.