

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நகுகம் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
தீவிரவாதிகள் காட்டுப் பகுதி ஒன்றில் ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். இன்று காலை வரை இரு தரப்பினரிடையேயான துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், நாவுகம் செக்டாரில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதை அடுத்து தீவிர தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டதாக தெரிவித்தார்.