

பேரையூர்:
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குரு (வயது 35). நேற்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் காரைக்கேணியில் உள்ள வாலகுருநாதன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். அங்கு தரிசனம் செய்த அவர்கள் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
டி.கல்லுப்பட்டி- ராஜபாளையம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது மதுரையில் இருந்து ராஜபாளையத்துக்கு காய்கறி ஏற்றிச் சென்ற மினி வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது பின்னால் அமர்ந்திருந்த குரு தவறி கீழே விழ, அவர் தலையில் வேன் டயர் ஏறியது. இதில் தலை நசுங்கி குரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் கண் முன்பே மனைவி கொடூரமாக இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.