

திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் இருந்து இன்று துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துகிடந்தார். உள்புறமாக தாழ் போடப்பட்டிருந்ததால் நோயாளிகள் கவனிக்கவில்லை.
இந்நிலையில் நகர் வடக்கு போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த செல்போனில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினர். இதில் இறந்தவர் சென்னை மாங்காடு மண்டலம் பகுதியை சேர்ந்த மகேஸ்கண்ணன்(40) என தெரியவந்தது.
அவரது தந்தை புருஷோத்தமன் என்பதும், வேலைக்காக திண்டுக்கல் வந்தபோது மகேஸ்கண்ணனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது கழிவறைக்கு சென்ற அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
2 நாட்கள் கழிவறையிலேயே கிடந்ததால் அவர் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. நகர்வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.