பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 41 பேர் கைது

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 41 பேர் கைது
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 41 பேர் கைது
Published on

பெரம்பலூர்:

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க, விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழுவினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கோஷங்களை எழுப்பியவாறு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையிலேயே இரும்பு தடுப்புகள் வைத்தும், கயிறு கட்டியும் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றால் கைது செய்யப்படுவீர்கள்? என்று போராட்டக்காரர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட செல்ல முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள், டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 8 பெண்கள் உள்பட 41 பேரை கைது செய்து வேனில் ஏற்றி, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர். மேலும் அந்த 41 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com