கற்பழிப்பு குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ரஷிய இளம்பெண்

வேலூர் ஜெயிலில் நடந்த அடையாள அணிவகுப்பில் கைதான கற்பழிப்பு குற்றவாளிகளை ரஷிய இளம்பெண் அடையாளம் காட்டினார்.
கற்பழிப்பு குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ரஷிய இளம்பெண்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் அபார்ட்மெண்டில் தங்கியிருந்த ரஷிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபார்ட்மெண்ட் உரிமையாளர் பாரதி, அவருடைய அண்ணன் நீலகண்டன் (35), மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய 4 பேரை கைதுசெய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ரஷிய இளம்பெண் குணமடைந்து 20-ந் தேதி ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக அவர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் அடையாள அணிவகுப்பு நடந்தது. இதற்காக ரஷிய இளம்பெண் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

ஆரணி மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி முன்னிலையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது மற்ற கைதிகள் 10 பேரை வரிசையாக நிற்க வைத்து, அவர்களுடன் ரஷிய பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாரதி, நீலகண்டன், மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.

அப்போது ரஷிய பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர், மானபங்கம் செய்தவர்கள் என 4 பேரையும் சரியாக அடையாளம் காட்டி உள்ளார். 5 முறை நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் அவர் தன்னை பலாத்காரம் செய்தவரையும், மானபங்கம் செய்தவர்களையும் அடையாளம் காட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆசிரமத்தில் தங்கி இருக்கும் மகளை பார்க்க ரஷியாவில் இருந்து அவரது தாயார் நேற்று திருவண்ணாமலை வந்தார். பின்னர் ஆசிரமத்துக்கு சென்று அவர் தனது மகளை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com