

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள், அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே இணைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அதிபர் புதின் பிறப்பித்த ஆணை செல்லாது என்று உக்ரைனும் அறிவித்தது. அதன்பின்னர் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்துள்ளது.