

சத்திஸ்கர் மாநிலத்தில் வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 வேட்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் சில வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது. ராய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராய்ப்பூர் தெற்கு தொகுதி தொடர்பாக நடந்த இந்த மோதலில், அலுவலகத்தில் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை தேர்தல் பொறுப்பாளர் புனியா சமாதானப்படுத்தினார்.