மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் எழுந்த சர்ச்சை கேள்வி -விளக்கமளித்த பிரதமர் மோடி

மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றபோது எழுந்த சர்ச்சை கேள்விக்கு பிரதமர் மோடி தற்போது விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புது டெல்லி:

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், காட்டுக்குள் வன விலங்குகளின் தன்மை என்ன? என்பது குறித்தும், காட்டில் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால் மனிதர்கள் தப்பிப்பது எப்படி? என்பது குறித்தும் அப்பகுதிகளுக்குச் சென்று விளக்கம் அளிப்பார்.

இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்தார். இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, கடந்த 12ம் தேதி இரவு 9 மணி அளவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சிதான் உலக அளவில் அதிக டிரெண்டான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சாதனையும் படைத்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியிலேயே பேசினார். ஆங்கிலேயரான பியர் கிரில்ஸ் எப்படி புரிந்துக் கொண்டு மீண்டும் பதிலளித்தார் என்ற சர்ச்சைக்குரிய கேள்வி பலருக்கும் எழுந்தது. 

இந்த சந்தேகத்துக்கு பிரதமர் மோடி, மனதில் குரல் எனும் நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றியபோது விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ‘மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொண்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். 

குறிப்பாக நீங்கள் இந்தியில் பேசியதை பியர் கிரில்ஸ் எப்படி புரிந்துக் கொண்டார்? என கேட்டனர். இதில் எந்த ரகசியமும் இல்லை. கிரில்ஸ் வயர் இல்லாத சிறிய மொழிமாற்ற கருவியினை காதில் பொருத்தி வைத்திருந்தார். 

நான் இந்தியில் பேசப்பேச அந்தக்கருவி ஆங்கிலத்தில் அவருக்கு மொழிபெயர்த்துக் கொண்டே இருந்தது. இது தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்’ என விளக்கம் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com