பிரசவத்திற்கு வந்த இளம்பெண் மரணம்- செந்துறை அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் முற்றுகை

செந்துறை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரின் கவனக்குறைவு தான் இளம்பெண் மரணத்துக்கு காரணம் எனக்கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். (உள்படம் ஜோதிகா)
சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். (உள்படம் ஜோதிகா)
Published on

செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த செந்துறை அருகே உள்ள குடகிப்பட்டி மணப்புளிகாடு என்ற பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி ஜோதிகா(வயது23). இவர்களுக்கு 2 வயதில் மோனிஷா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜோதிகா கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்தனர்.

அப்போது ஜோதிகாவின் உடல்நிலை திடீரென மோசமானது. இதையடுத்து அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே ஜோதிகா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோதிகாவின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

செந்துறை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரின் கவனக்குறைவுதான் ஜோதிகாவின் மரணத்துக்கு காரணம் எனக்கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி ஜோதிகாவின் உறவினர்கள் கூறுகையில், செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவவசதி இல்லை. பிரசவம் பார்க்க பெண் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. ஆண் டாக்டர்களே பிரசவம் பார்க்கும் நிலை உள்ளது. அவர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால் ஜோதிகா இறந்துள்ளார்.

எனவே இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பிரசவத்திற்காக ஆம்புலன்சில் ஏறியபோது திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல கூறினோம். ஆனால் டிரைவர் செந்துறைக்கு அழைத்துவந்துவிட்டார். இதுபற்றியும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

இதனிடையே இன்று காலை ஜோதிகாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செந்துறை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அப்பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்தவழியே போக்குவரத்து பாதித்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் தியாகு, நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட டாக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவோம் என அவர்கள் கூறினார்கள். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com