இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் - வடகொரியா

இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் என்று வடகொரியா வெளியுறவு கொள்கைகளுக்கான ஆலோசகர் கிம் கே குவான் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் - கிம் ஜாங் அன்
டிரம்ப் - கிம் ஜாங் அன்
Published on

பியாங்யாங்:

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய இருநாட்டு தலைவர்களும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அணுஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென வடகொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கான ஆலோசகரும், மூத்த தூதரக அதிகாரியுமான கிம் கே குவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொருளாதார தடைகள் முழுமையாக நீக்கப்படுவதற்கு முன்னால் வடகொரியா அதன் முழு ஆயுதங்களையும் கைவிடவேண்டும் என அமெரிக்கா பிடிவாதமாக இருக்கும் நிலையில் இருநாட்டு தலைவர்கள் இடையேயான இன்னொரு சந்திப்பு எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் உச்சி மாநாட்டின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை வடகொரியா தீவிரமாக பின்பற்றி வருகிறது. ஆனால் டிரம்பின் நடவடிக்கைகளும், அவர் எடுக்கும் முடிவுகளும் அதற்கு நேர்மாறாக உள்ளது.

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருதரப்பு உறவையும் புதுப்பிக்க டிரம்ப், பரந்த சிந்தனையுடன் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதை அவர் செய்வார் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com