அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

என் மீது வழக்கு தொடரட்டும்- மாணிக் தாகூர் எம்.பி.க்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால்

பால்வளத்துறையில் முறைகேடு நடந்திருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும் எனறு மாணிக் தாகூர் எம்.பி.க்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
Published on

சிவகாசி:

திருத்தங்கலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

மதங்கள், இனம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் கட்சி அ.தி.மு.க. இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். மு.க. ஸ்டாலின் பேசுவதை கேட்க தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை. அவரது பேச்சை மக்கள் ஜோக்காக பார்க்கிறார்கள்.

ஆவின் பாலக நிறுவனங்களில் சில்லரை விற்பனையில் சில தவறுகள் நடைபெறுவதாக புகார் வந்துள்ளதால் சில்லரை விற்பனையை தவிர்த்து பாக்கெட் மூலம் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரானவர்கள் சில்லரை விற்பனையில் புகுந்து தவறு செய்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் பால் முகவர்கள், விற்பனையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டால் முதல் - அமைச்சரிடம் ஆலோசனை செய்து தேவையான நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணிக் தாகூரை மக்கள் விரும்பி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கவில்லை. என்னைப்பற்றி விமர்சனம் செய்தால் பெயர் கிடைக்கும் என்பதற்காக விமர்சனம் செய்து வருகிறார்.

காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவதாக கூறி சிவகாசியில் உள்ள தொழில் அதிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர் மாணிக் தாகூர்.

பால்வளத்துறையில் முறைகேடு நடந்திருந்தால் அவர் வழக்கு தொடரட்டும். அதை சந்திக்க தயாராக உள்ளேன். ரஜினிகாந்த் நல்ல மனிதர். அரசியலுக்கு வரும் முன்பே அவரை விமர்சனம் செய்வது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com