

மாதவரம்:
மாதவரம் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார் வந்தது.
இதையடுத்து மாதவரத்தில் வடக்கு மோட்டார் வாகன வட்டார போக்கு வரத்து அதிகாரி அசோக் குமார் தலைமையில் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, ஜெயலட்சுமி, ஆனந்தன் ஆகியோர் கொளத்தூர், மூலக்கடை, திரு.வி.க.நகர் சுற்று பகுதிகளில் பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் தனியார் வாகனங்கள் தகுதி சான்று மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாமலும் வரி செலுத்தாமலும் இயக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் அதிகபாரம் ஏற்றியும் வாகனங்கள் சென்றன. அதிவேகமாகவும் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டன.
இதையடுத்து தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதேபோல் இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிகபாரம், அதிக பயணிகளை ஏற்றுதல் மற்றும் வரி செலுத்தாதவர்கள், எப்.சி., ஆய்வு முடிக்காமல் வாகனங்களை இயக்கியது அதிவேகமாக வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது 31 வழக்குகள் பதிவு செய்து ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா மற்றும் மாவட்ட கலெக்டர் பொறுப்பு முத்து உத்தரவின்பேரில் திருவள்ளூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் ஆகியோர் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
இதில், அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற 7 வேன்கள், அதிகபாரம் ஏற்றி வந்த 14 கனரக வாகனங்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற 6 மினி லாரிகள், அதிவேகமாக வாகனத்தை இயக்கிய 4 வாகனங்கள் உள்பட 31 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாகன ஓட்டுநர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட் டது. 31 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது