செய்யாத்துரை அலுவலகத்தில் 4வது நாளாக சோதனை நீடிப்பு - கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு

அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினரின் சோதனை இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. செய்யாத்துரை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். #ITRaid #SPK
செய்யாத்துரை
செய்யாத்துரை
Published on

எஸ்.பி.கே. வணிக வளாகத்தில் தற்காலிக அலுவலகம் அமைத்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாத்துரை நடத்தி வந்த எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.

அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாத்துரை வீடுகள், மதுரையில் உள்ள சொகுசு ஓட்டல் சென்னை அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என சோதனை பட்டியல் நீண்டது.

பணம் மற்றும் தங்கக் கட்டிகள் வீடுகளில் மட்டுமின்றி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்களிலும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டு வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கிய செய்யாத்துரை சிறிய காண்டிராக்ட் பணிகளை எடுக்கத் தொடங்கி, அரசியல் பிரமுகர்களின் நட்பால் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர்களை எடுத்து தொழில் செய்து வந்தார்.

அவரது இந்த அசுர வளர்ச்சி தான், வருமான வரித் துறையின் சோதனைக்கு ஆதாரமானது. தொழிலை விரிவுபடுத்திய செய்யாத்துரை, தனக்கு உதவியாக மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணி ஆகியோரையும் ஈடுபடுத்தினார்.

இதனால் அவர்களது வீடு, அலுவலகம் போன்றவற்றிலும் சோதனை தீவிரமாக நடந்தது.

இன்று 4-வது நாளாக அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை தொடர்ந்து நடத்தினர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தற்போது வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக செய்யாத்துரைக்கு சொந்தமான அருப்புக்கோட்டை எஸ்.பி. கே. வணிக வளாகத்திலேயே தற்காலிகமாக வருமான வரித்துறை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை, கமுதி மற்றும் அருப்புக்கோட்டையில் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களும் மூட்டை, மூட்டையாக எஸ்.பி.கே. வணிக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் அவற்றை வைத்த வருமான வரித்துறையினர், தற்காலிக அலுவலகத்தில் அமர்ந்து இரவு பகலாக அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

செய்யாத்துரையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது அரசியல் பிரமுகர்கள் தான் எனக் கூறப்படுகிறது.

இதில் சில மூத்த அமைச்சர்கள், செய்யாத்துரையுடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் மதுரையில் உள்ள எஸ்.பி.கே. சொகுசு ஓட்டலில் தங்கியது குறித்தும், அப்போது காண்டிராக்ட் பணிகள் குறித்து ஒப்பந்தம் ரகசிய பேரம் ஏதும் நடந்ததா? என்பது குறித்தும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரை ஓட்டலில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் போன்றவை ஆய்வு செய்யப்பட உள்ளதால், அரசியல் பிரமுகர்கள் சிக்கலாம் என தெரிகிறது.

இதுவரை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. வணிக வளாகம், வீடுகள் மற்றும் நூற்பு மில்லில் சோதனை நடத்திய அவர்கள், அடுத்த கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செய்யாத்துரையின் உறவினர்கள், அவரது அலுவலக, மில் ஊழியர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். #ITRaid #SPK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com