

ஜெருசலேம்:
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக தீராப்பகை நீடித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்த பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்து கொள்ள இஸ்ரேலும் முயன்று வருகின்றன.
இதேபோல், இஸ்ரேல் நாட்டு மக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஜென்மப்பகை நிலவி வருகிறது. இஸ்லாமியர்களின் மிகவும் பழைமையானதும், மூன்றாவது புனிதத்தலமாகவும் கருதப்படும் அல் அக்ஸா மசூதி இஸ்ரேல் நாட்டில் உள்ள பழைய ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது. இந்த மசூதியின் மேற்குப்புற மதில் சுவரை தங்களது புனித சின்னமாக யூத இனத்தவர்கள் கருதுகின்றனர்.
ஏழாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த இந்த மசூதியை மீட்பதற்காக பல்வேறு தாக்குதல்களை பாலஸ்தீனியர்கள் நடத்தி வந்துள்ளனர்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த மசூதியில் ஜும்மா தொழுமையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இந்த மசூதி அருகே பயங்கர ஆயுதங்களுடன் வந்த மூன்று பாலஸ்தீனியர்கள் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மீது ஆவேசமாக இயந்திர துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த போலீசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் இரு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்த வந்த மூன்று பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இதனையடுத்து மசூதி நுழைவு வாயிலில் இஸ்ரேல் அரசு பாதுகாப்பு காரணங்கள் கருதி மெட்டல் டிடெக்டர்களை பொருத்தியது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அவற்றை இஸ்ரேல் அரசு சமீபத்தில் அகற்றியது.
இந்த மசூதிக்குள் நேற்று ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் நுழைந்தனர். அவர்களுக்கும் இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் வெள்ளிகிழமை ’ஜும்மா’ தொழுகையில் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ள இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.
50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் கலவரங்களில் ஈடுபட அதிக வாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் தொழுகையில் பங்குபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பெண்கள் இங்கு தொழுகை நடத்த எந்த வயது வரம்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.