

முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் பள்ளி மூடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளியை திறந்தனர். அப்போது பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை கதவு உடைக்கப்பட்டு இருந் தது. உள்ளே அறையில் இருந்த 4 பீரோவை உடைத்து அதில் இருந்த பைல்கள் அனைத்தும் கீழே வீசப்பட்டு கிடந்தது. இதை கண்ட பள்ளி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த லாக்கரை தூக்கி சென்று பள்ளி வளாகத்தில் போட்டு இருப்பதும் தெரிய வந்தது. ஆசிரியர்களின் ஓய்வறையின் கதவு பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.
பள்ளியில் மர்ம கும்பல் புகுந்து சூறையாடியதை கேள்விப்பட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சாந்தி முத்துபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கடந்த வாரம் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் சிலரை அடித்ததாக புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
மேலும் லாக்கர் வரை உடைக்கப்பட்டு இருப்பதால் கொள்ளை முயற்சி சம்பவமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.