போயிங் விமான விபத்தில் கணவர் பலி - ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு

போயிங் விமான விபத்தில் கணவர் பலி - ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு

போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
Published on

எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால், நாடு முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த நாடெஜ் டூபோஸ் சீக்ஸ் என்கிற பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,925 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம்) இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com