

பெங்களூரு:
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட் மொபைல் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் 10 கோடிக்கும் அதிகமான டவுன்லோடுகளை கடந்துள்ளது. அந்த வகையில் கூகுள் பிளே ஸ்டோரில் இத்தகைய டவுன்லோடுகளை கடந்த முதல் செயலியாக பிளிப்கார்ட் மொபைல் ஆப் உள்ளது.
இந்தியாவை சேர்ந்த மொபைல் செயலிகளில் இத்தகைய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள செயலிகளில் பிளிப்கார்ட் இடம்பிடித்துள்ளது. மொபைல் பேமென்ட் மற்றும் போக்குவரத்து சார்ந்த செயலிகளை பின்னுக்கு தள்ளி பிளிப்கார்ட் முதலிடம் பிடித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வழங்கும் மதிப்பீடுகளை பொருத்த வரையில் பிளிப்கார்ட் செயலி 40 லட்சம் வாடிக்கைளர்கள் 4.4 புள்ளிகளை வழங்கியுள்ளனர். இத்தகைய மதிப்பீடுகளை பெற்ற முதல் இ-காமர்ஸ் செயலியாக பிளிப்கார்ட் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 30 கோடிகளை கடந்துல்ள நிலையில், பெரும்பாலானோர் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பிளிப்கார்ட் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
'வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள அம்சங்களை புதிதாய் வழங்குவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், இதனால் எங்களது வாடிக்கையாளர்கள் செயலியிலேயே தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்கின்றனர்.' என பிளிப்கார்ட் நிறுவனத்தின் ரவி கரிகிபதி தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அக்டோபர் 14-ம் தேதி (நாளை) துவங்கி அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முன்னதாக பிளிப்ர்கார்ட் நடத்திய பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பிளிப்கார்ட் விற்பனை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.