தந்தை இறந்த சோகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை

தவளக்குப்பம் அருகே தந்தை இறந்த சோகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தந்தை இறந்த சோகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா. இவர்களது மகள் புவனேஸ்வரி (வயது 15) இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். இதற்கிடையே  கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறில் சரவணன் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை மீது அதிகளவு பாசம் வைத்திருந்த புவனேஸ்வரிக்கு தந்தையின் மரணம் தாங்கி கொள்ள முடியவில்லை. எப்போதும் தந்தையின்  நினைவிலேயே புவனேஸ்வரி இருந்து வந்தார். சோகத்தை மறைக்க  குருசுகுப்பத்தில் உள்ள அவரது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கவைத்து இருந்தனர். எனினும் புவனேஸ்வரி பாட்டி சரோஜினியிடம்  தனது தந்தை இறப்பு குறித்து அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார். அவரை சரோஜினி சமாதானம்  செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை சரோஜினி கடைக்கு  சென்றிருந்த வேளையில்  புவனேஸ்வரி வீட்டின் குளியல் அறையில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். பொருட்கள் வாங்கி கொண்டு சரோஜினி வீடு திரும்பிய போது பேத்தி புவனேஸ்வரி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் புவனேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்  ஏற்கனவே புவனேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com