டெங்கு கொசு புழுக்கள் இருந்த கடைக்கு அபராதம்

திண்டுக்கல்லில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் வைத்திருந்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்
Published on

குள்ளனம்பட்டி:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் கலெக்டர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின்பேரில் அதிகாரிகள் வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள், வீடுகளில் சோதனை செய்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வட்டார சுகாதார ஆய்வாளர் முகமது கமாலுதீன் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, ஊராட்சி செயலாளர்கள் நாகராஜ் (அடியனூத்து), தாமஸ் (தோட்டனூத்து), சுகாதார ஆய்வாளர் ஹரிபிரசாத் அடங்கிய குழுவினர் நத்தம் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். பொன்னகரத்தில் உள்ள கடையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் டயர்களில் தண்ணீர் தேங்கியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இதேபோல் சிறுமலை பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சோதனை செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com