டெங்கு கொசு: திருமண மண்டபம்-குடோனுக்கு ரூ.2½ லட்சம் அபராதம்

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த திருமண மண்டபம் மற்றும் குடோனுக்கு ரூ.2½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்
Published on

ஆவடி:

ஆவடி பகுதியில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருக்கும் இடங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகராட்சி பொறியாளர் வைத்தியலிங்கம், சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் ஜாபர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

இன்று காலை அவர்கள் ஆவடி ஓ.சி.எப். பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் ஆய்வு செய்தனர்,அப்போது அங்கிருந்த பழைய டயர் உள்ளிட்டவற்றில் டெங்கு கொசு இருப்பது தெரிந்தது. இதையடுத்து குடோனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இதேபோல் புதிய ராணுவ சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டெங்கு கொசு இருப்பது கண்டறியப்பட்டு ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தனர்.

ஆவடி காமராஜர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் டெங்கு கொசு இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் பட்டாபிராம் தண்டுரை பகுதியில் குடியிருப்பு மற்றும் கடைகளில் ஆய்வு செய்தபோது அங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

காஞ்சிபுரம் பகுதியில் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் கே.மகேந்திரன், நகர் நல அலுவலர் டாக்டர் முத்து மற்றும் சுகாதாரத்துறையினர், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் பழையஇரும்பு பொருட்களை விற்கும் கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு 4 டன் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது தெரிய வந்தது. உடனே அதனை அங்கிருந்து அகற்ற உத்தர விட்டனர். டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக கூறி இரும்பு கடை உரிமையாளர் பலராமனுக்கு நகராட்சி சுகாதாரத்துறையினர் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com