சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு

தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சசிகலா
சசிகலா
Published on

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை, தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன.

தஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மி‌‌ஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் வீடு உள்ளது.

அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து யாரும் அங்கு வசிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் சசிகலா, கட்டிட உபயோகிப்பாளர் மனோகர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அதில், தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எஸ்.பி.ஜி. மி‌‌ஷன் உயர்நிலைப் பள்ளி ரோட்டில் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் அவ்வழியே செல்பவர்களுக்கும், கட்டிடத்தை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கும், பள்ளிக்கும் அருகாமையில் வீடு உள்ளது.

எனவே அபாயகரமான கட்டிடத்தை எவ்விதமான உபயோகத்திற்கும் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுமக்களுக்கும், கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டிடத்தை தக்க முன்னேற்பாடுடன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்த தவறும்பட்சத்தில் சேத, இழப்பீடுகளுக்கு கட்டிட உபயோகிப்பாளர் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பாவார்கள்.

மேலும் தாங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இந்த செயலுக்கான செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் கட்டிடம் அகற்றப்படாததால் தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று எஸ்.பி.ஜி. மி‌‌ஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீட்டிற்கு வந்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அதில், இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால் கட்டிடத்தின் உள்புறம் செல்லுதல் அல்லது பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.

பின்னர் வீட்டில் தங்கியிருந்த மனோகரிடம் மாநகராட்சி அதிகாரிகள் நீங்கள் உடனே வீட்டை காலி செய்யுங்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்?. உரிய நபரிடம் கூறி வீட்டை விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

சசிகலா வீட்டை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com