சென்னை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டம் 14-வது நாளாக நீடிப்பு

அரசு டாக்டர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 14-வது நாளாக அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டம் 14-வது நாளாக நீடிப்பு
Published on

சென்னை:

அரசு டாக்டர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 14-வது நாளாக அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

டாக்டர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும், இன்று முதல் 4-ந்தேதி வரை எம்.எம்.சி. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

5 மற்றும் 6-ந்தேதிகளில் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

8-ந்தேதி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அரசு டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள்.

சுமார் 15 ஆயிரம் டாக்டர்கள் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளனர். அவசர அறுவை சிகிச்சை செய்யக்கூடிய டாக்டர்கள் மட்டும் பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com