

சென்னை:
போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும்போது வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
அதுபோன்ற வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
சமீபத்தில் நீலாங்கரையில் கால்டாக்சி டிரைவர் மணிகண்டன், தன்னை போக்குவரத்து போலீசார் தாக்கியதாக கூறி தீக்குளித்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி போக்குவரத்து போலீசார் சட்டைகளில் சிறிய அளவிலான கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் போலீசார்- வாகன ஓட்டிகள் இடையேயான பேச்சுக்களை கண்காணிக்க முடியும். இந்த கேமிராக்கள் சட்டை பை அல்லது காலரில் பொருத்தும் வகையில் இருக்கும்.
சில நூறு கிராம் எடையுள்ள கேமிராவில் பதிவாகும் வீடியோ மற்றும் ஆடியோக்கள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவாகி விடும்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரில் பரீட்சார்த்த முறையில் போக்குவரத்து போலீசார் சட்டைகளில் கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews